துரைப்பாக்கம்: ராஜீவ்காந்தி சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகளை அகற்றி, குண்டு, குழியுமாக உள்ள சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி சாலை, அடையார் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை 22 கிமீ தூரம் ரூ.300 கோடி மதிப்பீட்டில், ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, இச்சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் இச்சாலையில் ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் சென்று வருகின்றன. இந்த சர்வீஸ் சாலையும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால், அவ்வழியை செல்லும் வாகனங்கள் பழுதடைவதோடு, பைக்குகளில் செல்வோர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு செல்லும் நிலை உள்ளது. மேலும், இச்சாலையில் நடைபாதைகளை அங்குள்ள கடைகள் ஆக்கிரமித்து உள்ளதால் பாதசாரிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து பெருங்குடி கார்ப்பரேஷன் சாலை வரை இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, நடைபாதையை ஆக்கிரமித்து செய்துள்ள கடைகளை அகற்றுவதோடு குண்டு, குழியுமாக உள்ள சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.