வேலூர்: நடுரோட்டில் பயணிகளை இறக்கிவிட்டது தொடர்பாக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து மண்டல பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு உட்பட்ட அரசு பஸ் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணிக்கு வேலூரிலிருந்து பேரணாம்பட்டுக்கு வந்தது. அந்த பஸ்சில் பேரணாம்பட்டை சேர்ந்த பயணிகள் 5 பேர் மற்றும் குடியாத்தம் பயணிகள் சென்றனர். பஸ் பேரணாம்பட்டு நகருக்குள் செல்லவில்லை. மாறாக பேரணாம்பட்டு புத்துக்கோயில் சந்திப்பு சாலையில் பயணிகளை நடுரோட்டில் கொட்டும் மழையில் இறக்கி விட்டு பணிமனைக்கு எடுத்துச்சென்றனர். இதுகுறித்து விசாரித்த போக்குவரத்துக்கழக வேலூர் மண்டல பொதுமேலாளர் கணபதி, அந்த பஸ் டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் சத்தியநாராயணன், உடந்தையாக இருந்த பணிமனை காவலாளி கவுதமன் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.