சாலையின் குறுக்கே மாடு வந்ததால் விபத்தில் அர்ச்சகர் பரிதாப பலி

திருவள்ளூர்: கணபதி ஹோமம் செய்வதற்காக பைக்கில் சென்றபோது சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக்கில் இருந்து கிழே விழுந்த அர்ச்சகர் பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (62). இவர் திருவள்ளூர் அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோயிலில் கடந்த 6 மாதங்களாக அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். கடந்த 29ம் தேதி அர்ச்சகர் ராஜா சென்னையில் உள்ள ஒருவருடைய வீட்டிற்கு கணபதி ஹோமம் செய்வதற்காக ஜானகிராமன் (57) என்பவருடன் பைக்கில் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பைக்கை ஜானகிராமன் ஓட்டினார். இவர்கள் திருவள்ளூர் அடுத்த காக்களூர் சாலையில் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதனால் பதறிப்போன ஜானகிராமன் திடீரென்று பிரேக் பிடித்தார். அப்போது இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் அர்ச்சகர் ராஜா தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். ஜானகிராமன் லேசான காயத்துடன் தப்பினார். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு ராஜாவை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அர்ச்சகர் ராஜா பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை