சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுபோல் திருவள்ளூர் வழியாக பள்ளி, கல்லூரி பேருந்துகளும் பெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பேருந்துகள், வேன்கள், ஆட்டோ, கார் போன்ற ஆயிரக்கணக்கான வாகனங்களும் இயக்கப்படுகின்றன.

இந்த சாலைகளில் உலாவரும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதன்காரணமாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகளில் படுத்துக் கிடக்கும் மாடுகள் மற்றும் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் மாட்டின் உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்ததால் இந்தமுறை பிடிபடும் மாடுகளை திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு எச்சரிக்கைவிடுத்திருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணி முதல் நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் கோவிந்தராஜூ முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் பிலிப்ஸ், சீனிவாசன், கோட்டீஸ்வரன் ஆகியோர் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெ.என்.சாலை, சிவிஎன் சாலை, மோதிலால் தெரு ஆகிய பகுதிகளில் சாலைகளில் படுத்துக்கிடந்த 42 மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு