கும்மிடிப்பூண்டி: புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில், கவரப்பேட்டையில் இயங்கும் ஆர்எம்கே ரெசிடென்ஷியல் பள்ளி மாணவர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். புதுடெல்லியில் கடந்த வாரம் பள்ளி மாணவர்களுக்கு இடையே தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் நடந்தன. இதில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா, அரியானா, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில், தமிழகத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் இயங்கி வரும் ஆர்எம்கே ரெசிடென்ஷியல் பள்ளி மாணவர் ஜி.திலீப் பங்கேற்றார்.
இப்போட்டியில் ஆர்எம்கே பள்ளி மாணவர் திலீப், பல்வேறு வகையான துப்பாக்கி சுடுதல் மற்றும் குரூப்பிங் சுடுதல் போட்டியில் வெற்றி பெற்று, என்சிசியின் லெப்டினென்ட் ஜெனரல் குர்பிர்பால்சிங் மற்றும் ராணுவ அதிகாரிகளிடம் இருந்து தங்கம், வெள்ளி பதக்கங்கள் பரிசு பெற்றார். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை ஆர்எம்கே ரெசிடென்ஷியல் பள்ளி வளாகத்தில், தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர் திலீப்புக்கு ஆர்எம்கே கல்வி குழுமத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், தாளாளர் எலமஞ்சி பிரதீப், தலைமை ஆசிரியர் சப்னா சன்கலா, என்சிசி அதிகாரி முகமது கனி மற்றும் ஏராளமான மாணவ-மாணவிகள் ராயல் சல்யூட் மரியாதை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.