காவிரி ஆற்றில் இறங்கி நீச்சல் தெரியாமல் உயிரிழப்புகள் அதிகரிப்பு பயமின்றி குளிக்க தடுப்பு வேலி தேவை

* பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும்

* மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்

கரூர் : ஆற்றில் இறங்கி நீச்சல் தெரியாமல் உயிரிழப்புகள் ஏற்படும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில், பிற மாவட்ட ஆற்றங்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல, பொதுமக்கள் பயமின்றி இறங்கி குளித்துச் செல்லும் வகையில் பாதுகாப்பு வசதிகளை உருவாக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆறு என இரண்டு ஆறுகள் செல்கிறது. இந்த இரண்டு ஆறுகளும், கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் இணைந்து ஒருமித்த காவிரியாக மாயனூர் வழியாக கொள்ளிடம், திருச்சி நோக்கி செல்கிறது.காவிரி ஆறு கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், நெரூர், வாங்கல், மாயனூர், லாலாப்பேட்டை, குளித்தலை ஆகிய பகுதிகளின் வழியாக திருச்சி நோக்கி செல்கிறது. அமராவதி ஆறு, கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், கொத்தம்பாளையம், செட்டிப்பாளையம், கரூர் மாநகரம், புலியூர், மேலப்பாளையம் வழியாக திருமுக்கூடலூர் சென்று காவரியில் கலக்கிறது.

வடகிழக்கு பருவமழை காலங்களின் போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து இரண்டு ஆறுகளில் வெள்ளம் வருகிறது. மேலும், மேட்டூர் அணை நிரம்பும் போதும், காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் போதும், காவிரியில் வெள்ளம் வருகிறது.கரூர் மாவட்டத்தில் இரண்டு ஆறுகள் பாய்ந்தாலும், ஆற்றில் இறங்கி, ஆழமான பகுதிக்கு சென்று, நீச்சல் தெரியாமல் இறக்கும் நிகழ்வுகள் அமராவதி ஆற்றுப்பகுதியை விட, காவிரி ஆற்றுப்பகுதிகளான நெரூர், மாயனூர் போன்ற பகுதிகளில்தான் அதிகளவு நடைபெற்று வருகிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே ஒரு முறை, அமராவதி ஆறு செல்லும் செட்டிப்பாளையம் பகுதியில்தான் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இறந்தனர். அதற்கு பிறகு, பெரியளவில் அமராவதி ஆற்றுப்பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை.

ஆனால், காவிரி ஆற்றில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயனூர் மற்றும் நெரூர் பகுதியில் நான்கு மாணவிகள் உட்பட ஐந்து பேர், ஆற்றில் இறங்கி, சூழலில் சிக்கி இறந்துள்ளனர். இதுநாள் வரை கரூர் மாவட்ட காவரி ஆற்றுப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் கரூர் மாவட்ட நிர்வாகம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காவிரி ஆறு பயணிக்கும் நெரூர் மற்றும் மாயனூர் பகுதிகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பொதுமக்கள் யாரும் இங்கு இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இதை பெரும்பாலும் யாரும் பின்பற்றாமல் இருப்பதே இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு மிக முக்கிய காரணமாக விளங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.காவிரி ஆற்றுப்பகுதிகளான நெரூர் மற்றும் மாயனூர் பகுதியில்தான் அதிகளவு உயிரிழப்புகள் ஆண்டுதோறும் ஏற்பட்டு வருகிறது. இதனை முற்றிலும் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ஆறுகளில் வெள்ளம் வரும் நாட்களில், அந்தந்த காவல் துறை சார்பில் ஆற்றுப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, அதிகம் வெள்ளம் வரும் சமயங்களில் போலீசார்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்டம் பவானியில், காவிரி, பவானி, சரஸ்வதி என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியான பவானி சங்கமேஸ்வரர் கோயில் அருகே, பொதுமக்கள் பயமின்றி, பாதுகாப்புடன் இறங்கி குளித்துச் செல்லும் வகையில், குறிப்பிட்ட தூரம் வரை தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, தரைப்பகுதியில் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து கரூர் மாவட்ட பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள், அகன்ற காவரியை பார்த்ததும், இறங்கி குளிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகம் வருகிறது. வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள், அவர்களின் பகுதிகளில் ஆறுகள் இல்லாத காரணத்தினால், ஆறுகளின் போக்கு, அதில் இறங்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரியாத நிலையில்தான் இதுபோல விபத்தில் சிக்கிக் கொள்வதாக பொதுநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே, கரூர் மாவட்ட நிர்வாகம் இது சம்பந்தமாக, ஆலோசித்து, ஆற்றில் இறங்கி உயிரிழப்புகள் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து, இதுபோன்ற பணிகள் மேற்கொள்ள சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்தில், அதற்கான இடங்களை தேர்வு செய்து, அதுபோன்ற பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்