*விவசாயிகள் வேதனை
ஸ்ரீமுஷ்ணம் : எசனூர் வெள்ளாற்றில் கருவேல மரங்கள் அதிக அளவு வளர்ந்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே எசனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் வெள்ளாறு அமைந்துள்ளது. இது விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இங்கு ஏற்கனவே 2011-12ம் ஆண்டு மணல் குவாரி செயல்பட்டுள்ளது. மழைகாலங்களில் வரும் வெள்ளபெருக்கால் ஆற்றின் போக்குமாறி வருகிறது.
இதனால் விவசாய விளைநிலங்களில் ஏற்கனவே ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பல்வேறு விவசாயிகளின் விளைநிலங்களில் ஆற்றின் மண் புகுந்து விளைநிலங்கள் பாதிப்பு ஏற்பட்டு பயிர் செய்யமுடியாநிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை போதிய அளவு இல்லாததால், ஆற்றின் பல்வேறு இடங்களில் அதிகளவு கருவேல மரங்கள் முளைத்துள்ளது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வெள்ளாற்றில் உள்ள கருவேல மரங்களை மழைகாலம் தொடங்குவதற்கு முன் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.