ஆரணி : ஆரணி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள், ஆண்கள், பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு, அவசவர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை மற்றும் பிரசவ பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு மருத்துவமனைக்கு ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பொதுமக்கள் என 1500 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் மூலம் மக்கும், மக்கா குப்பைகளை தரம்பிரித்து மருத்துவமனை பின்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் கையுறைகள், நோயாளிகள், முகக்கவசம், சிகிச்சைக்காக வந்து செல்லும் நபர்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள், மருத்துவ கழிவுகளான பயன்படுத்திய ஊசிகள், காலாவதியான மருந்து மாத்திரைகள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட கழிவுகளை குப்பைகளை தரம் பிரிக்காமல், மருத்துவமனை வளாகத்தில் உள்ள வழி பாதைகளிலும், ஆங்காங்கே குப்பை மற்றும் மருத்துவ கழிவுகளை தூய்மை பணியாளர்கள் முறையாக அகற்றாமல் மலை போல் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இதனால், அந்த குப்பைகளை பன்றி, நாய்கள் கிளறிவிட்டு செல்வதால், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் நோயாளிகள், மருத்துவமனை வளாகம் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்
தொற்று பரவுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
அதேபோல், மருத்துவமனை வளாகம் சுற்றி செடி, கொடிகள், முள்புதர்களால் சூழ்ந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் கொசுக்கள், விஷ பூச்சிகள், விஷ ஜந்துக்கள் அதிகளவில் வருவதால், நோயாளிகள், பொதுமக்கள் அச்சத்துடனும், கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், மருத்துவனை வாளகத்தில் நோயாளிகளுக்கு பயன்படுத்திய மருத்துவ கழிவுகள், குப்பைகள் அகற்றியும், சொடி, கொடிகள், முள்புதர்களை முழுமையாக அகற்றி தூய்மை பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், குப்பைகள் மற்றும் செடி, கொடிகைள உடனடியாக அகற்றி, தூய்மை பணிகள் மேற்கொண்டு, மருத்துவ வளாகம் சுற்றி கொசு மருந்துக்கள் அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.