இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவுற்ற நிலையில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. சம்பிரதாய போட்டியான கடைசி டெஸ்ட் நாளை தர்மசாலா மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் பெட்டிங் குறித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்த கருத்துக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா பதிலடி கொடுத்துள்ளார். இந்த தொடரில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆக்ரோஷமான பேட்டிங் ஸ்டைல், பாஸ்பால் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பென் டக்கெட் கருத்து தெரிவித்திருந்தார்.
ரோஹித் ஷர்மா பதிலடி: “எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒரு பையன் இருந்தான், ஒருவேளை பென் டக்கெட் அவன் விளையாடுவதைப் பார்த்திருக்க மாட்டார்” என தெரிவித்தார். மேலும் “பாஸ்பால் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. யாரிடமிருந்தும் ஆக்ரோஷமாக ஆடுவதை நான் பார்த்ததில்லை. கடந்த முறை இங்கு இருந்ததை விட இங்கிலாந்து சிறப்பாக விளையாடியுள்ளது. ஆனால் பேஸ்பால் என்றால் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை.
நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளான போதெல்லாம், எதிரணியின் மீது அழுத்தத்தை மீண்டும் கொடுக்க முடிந்தது. அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, தர்மசாலா மைதானம் வழக்கமான இந்திய ஆடுகளம் போல் தெரிகிறது. வெப்பநிலை குறையும் போது சில அசைவுகள் இருக்கும், ஆனால் ஒரு நல்ல பிட்ச் போல் தெரிகிறது” என ரோஹித் தெரிவித்துள்ளார்.