அர்ஜென்டினா: நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்தது. ‘ரிங் ஆஃப் ஃபயர்’ எனப்படும் வளைய சூரிய கிரகணத்தை பசிபிக் பெருங்கடல், தெற்கு சிலி, தெற்கு அர்ஜென்டினா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் கண்டு ரசித்தனர். இந்திய நேரப்படி நேற்று இரவு 9.13 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.15 மணி வரை இந்த அதிசய நிகழ்வு நடந்தது.
சந்திரன் நேரடியாக சூரியனுக்கு முன்னாள் செல்லும் போது நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரியனின் மேற்பரப்பை முழுவதுமாக நிலவால் மறைக்க முடியாது என்பதால் வானில் நெருப்பு வளையம் போன்று தோன்றும். ஈஸ்டர் தீவில் இந்த நிகழ்வை தெளிவாக பார்க்க முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளதால் அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.