சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று கேட்டபோது, ஜனவரி 14ம் தேதியோடு தொகுப்பை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வாங்காதவர்களின் எண்ணிக்கை சுமார் 100 முதல் 200 வரை உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை சுமார் 25 சதவீதத்திற்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் வாங்கவில்லை. எனவே, அறிவிக்கப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளும்வரை தொடர்ந்து வழங்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.