*விவசாயிகள் கவலை
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் கன்னிப்பூ பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், பல இடங்களில் கன்னிப்பூ சாகுபடி தாமதமாக தொடங்கப்பட்டது. ஆனால் குளத்து பாசனத்தை நம்பி பயிரிடப்பட்ட பறக்கை, பள்ளம் பகுதிகளில் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிருக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் இருப்பதால், கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரை நல்லபடியாக வளர்த்து அறுவடை செய்யமுடியுமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சீராக விவசாய நிலத்திற்கு கிடைக்காமல் உள்ளது. மேலும் கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இது குறித்து முன்னோடி விவசாயி செண்பசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் மழை ஏமாற்றியதால், சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரை காப்பாற்ற முடியாத நிலை இருந்து வருகிறது. அணை திறக்கப்பட்ட சில நாட்களில் அணை அடைக்கப்பட்டு, சானல்கள், கால்வாய்கள் சீரமைப்பு, தூர்வாரும் பணி நடந்தது. இதனால் நெற்பயிர் சாகுபடி காலம் கடந்து சென்றது. தற்போது அணையில் இருந்து அனைத்து சானல்களிலும் குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் சானலில் உள்ள மதகுகள் வழியாக வயல்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காத நிலை இருந்து வருகிறது.கடந்த இரு தினங்களுக்கு முன்பு தோவாளை சானலில் தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் அஞ்சுகிராமம் பகுதிக்கு இன்னும் சென்று சேரவில்லை. ஆனாலும் செண்பராமன்புதூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயல்களில் தண்ணீர் இன்றி வெடித்து காணப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் தண்ணீர் கிடைக்காமல் இருந்தால் நெற்பயிர்கள் கருகும் நிலை உருவாகும் என்றார்.
விலைக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்சும் பரிதாபம்
செண்பசேகரபிள்ளை கூறுகையில், கடைவரம்பு பகுதிகளான அஞ்சுகிராமம் பகுதிகளில் தண்ணீர் விலைக்கு வாங்கி நெற்பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். நடவு செய்யப்பட்ட கன்னிப்பூ பயிரை எப்படியாவது நல்லபடியாக அறுவடை செய்ய வேண்டும் என விவசாயிகள் எண்ணுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகவும், பொதுப்பணித்துறையும் அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து மாவட்டத்தில் உள்ள வயல்கள் பயன்படும் வகையில் சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றார்.