சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை: ஐகோர்ட் விளக்கம்

சென்னை: சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர், சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை. சாதிகளுக்கான சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சாதி மதமற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டக்குரியது. அதேவேளையில் இதுபோல் வழங்கினால் சில பிரச்னைகள் ஏற்படும். அத்தகைய சான்றிதழை வழங்குவது, சொத்து வாரிசுரிமை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அரசு உத்தரவுப்படி கல்வி நிலையங்களின் விண்ணப்பங்களில், சாதி மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்தி செய்யாமல் விட்டு விடலாம். அதற்கான உரிமை உள்ளது. அது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்ப முடியாது. சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

Related posts

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து 2 பேர் உயிரிழப்பு

அரசு பஸ் கார் மீது மோதி 2 பேர் பலி

இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக திமுக அரசு திகழ்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீலாது நபி வாழ்த்து