சென்னை: சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் மீது விசாரணை நடத்த நிர்வாகத்தால் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகள், பெற்றோர் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவிகள் 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகள் தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி அனிதா சுமந்த், “கலாஷேத்ராவுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார் விரும்பதகாதது மட்டுமின்றி மிகவும் கவலைக்குரியது.
சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. நீதிபதி கண்ணன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக அறக்கட்டளை பரிசீலிக்க வேண்டும். கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும்பழிக்கு உள்ளாகியுள்ளது, புகாருக்கு உள்ளான பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற குழுவின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.