திருவனந்தபுரம்: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கேரள சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவான விஜின் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியது: மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்வு எழுதிய 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை இந்தத் தேர்வில் நடந்த முறைகேடுகள் கடுமையாக பாதித்துள்ளது. இது மன்னிக்க முடியாத குற்றமாகும். நீட் பயிற்சி மையங்களுடன் சேர்ந்து நடத்தப்பட்ட இந்த மோசடியில் பெருமளவு பணம் புழங்கியுள்ளது. எனவே இந்த மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பிறகு பேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன் பின் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.