கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலானது: புதிய அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் அத்தங்கிகாவனூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள அத்தங்கிகாவனூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு இ-சேவை மையம் அருகே கடந்த ஓராண்டுக்கு முன் ₹10 லட்சம் மதிப்பில் புதிதாக ஒரு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. எனினும், இந்த அங்கன்வாடி மையம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால், அங்கு படிக்க வேண்டிய மாணவர்கள், தற்போது ஒரு பாழடைந்த கட்டிடத்தில்தான் தொடர்ந்து படிக்கவேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், மாணவர்களின் பயன்பாட்டுக்காக புதிதாக கட்டப்பட்டு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாத அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என அத்தங்கிகாவனூர் கிராமசபை கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பெரியபாளையத்தில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில், அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர் பேசினார். எனவே, அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் வீணாகி வரும் அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறப்பதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு