Monday, July 1, 2024
Home » அமணம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலையம், பணிமனை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க கோரிக்கை

அமணம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலையம், பணிமனை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க கோரிக்கை

by Ranjith

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அமணம்பாக்கம் ஊராட்சி தாமரைப்பாக்கம் பகுதியில் விவசாயிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும், இந்த ஊரைச் சுற்றி 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு வந்து அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி, வேலை சம்மந்தமாகவும் செல்வார்கள். இதற்காக இந்த பகுதி மக்கள் விழுப்புரம் கோட்ட பேருந்துகளிலும், மாநகர பேருந்துகளிலும் செல்வார்கள்.

ஆனால் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால், தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் மாநகர பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியின் போது தாமரைப்பாக்கம் அருகில் அமணம்பாக்கம் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள இடத்தில் மாநகர பேருந்து பணிமனை மற்றும் மாநகர பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தது. அதன்பேரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து 5.5 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து பெயர் பலகை வைத்து விட்டு சென்றனர்.

அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பேருந்து பணிமனை வேலையை இதுவரை தொடங்கவில்லை. விரைவில் பணிகள் தொடங்குமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது, தாமரைப்பாக்கம் பகுதியில் மாநகர பேருந்து பனிமனையும், பேருந்து நிலையமும் அமைந்தால் வியாபாரிகளான எங்களுக்கு தேவையான பொருட்களை நேரடியாக பாரிமுனைக்கு சென்று வாங்க முடியும்.

இல்லாவிட்டால் தாமரைப்பாக்கத்திலிருந்து செங்குன்றம் சென்று, அங்கிருந்து கோயம்பேடு, பாரிமுனை பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, மாநகர பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைத்தால் வசதியாக இருக்கும். மேலும், பேருந்து பணிமனை வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் செய்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை என்றனர்.

You may also like

Leave a Comment

10 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi