மேலும், சென்னை விமானநிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமானோர் நடமாட்டம் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு சென்னை முழுவதும் போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையில் இணையும் பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு தின விழா நடைபெறும் மெரினா காமராஜர் சாலை முழுவதும் சென்னை பாதுகாப்பு பிரிவின் காவலர்கள் தலைமையில் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய்கள் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த காவலர்கள் படகுகள் மூலம் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் எந்த இடங்களிலும் டிரோன்கள் பறப்பதற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி யாரேனும் டிரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.