சேந்தமங்கலம்: கொல்லிமலையில் பிரதான சாலையில் மழையால் சரிந்த தடுப்பு சுவர்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சுற்றுலா தளத்திற்கு, தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில வாரங்களாக கொல்லிமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசிவுகளை கொண்ட பிரதான சாலையில், மழையின் காரணமாக சில கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள தடுப்பு சுவர்கள் சரிந்து விழுந்தது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் சரிந்து விழுந்த கற்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் மழை இல்லாததால் தடுப்பு சுவர்கள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் சுப்பிரமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மழை தொடங்குவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். மேலும் கொண்டை ஊசி வளைவுகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட உள்ள இடங்களை ஆய்வு மேற்கொண்டு, தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் இருந்து சாலைகளுக்கு மழைநீர் வரும் பகுதிகளை ஆய்வு செய்து சாலைக்கு செல்லாமல் அருகில் உள்ள மழைநீர் வடிகாலில் செல்வதற்கு ஏதுவாக சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.