Friday, September 13, 2024
Home » வாடகைக்கு எடுத்த காரை ரூ.3 லட்சத்துக்கு விற்று மோசடி: திருப்பிக் கேட்டதற்கு கொலை மிரட்டல்

வாடகைக்கு எடுத்த காரை ரூ.3 லட்சத்துக்கு விற்று மோசடி: திருப்பிக் கேட்டதற்கு கொலை மிரட்டல்

by Ranjith

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வாடகை காரை ரூ.3 லட்சத்துக்கு விற்று மோசடி செய்தவர் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாலுகா காவல்நிலையத்தில், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த குப்பம்மாசத்திரம், குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (33). இவர் தனது தம்பியான சதீஷ் என்பவர் பெயரில் மாருதி காரை கடந்த மே மாதம் செயலி மூலம் வாங்கியுள்ளார்.

இதனையடுத்து கடலூர் மாவட்டம் அனுக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் அலைபேசியில் சிலம்பரசனை தொடர்பு கொண்டு பேசி, காரை 6 நாட்கள் வாடகைக்காக எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 8ம் தேதி சிவபிரகாஷை சிலம்பரசன் தொடர்பு கொண்டபோது, சிவபிரகாஷின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காரில் இருந்த ஜிபிஎஸ் செயலி மூலம் கார் திருப்பூரில் இருப்பதைக் கண்டுபிடித்து, அங்கு சென்று பார்த்தபோது பழனிச்சாமி என்பவர் அந்த காரை வைத்திருப்பது சிலம்பரசனுக்கு தெரியவந்தது.

அவரிடம் காரை கேட்டதற்கு சிவபிரகாஷ் என்பவர் என்னிடம் ரூ.3 லட்சத்திற்கு காரை அடமானம் வைத்து பணத்தை வாங்கி சென்றுவிட்டார். எனவே ரூ.3 லட்சம் கொடுத்தால் காரை தருவேன். இல்லையென்றால் காரை பிரித்து விற்றுவிடுவேன். இதற்கு மேல் இங்கிருந்தால் உன்னை காலி செய்து விடுவோம் என்று பழனிச்சாமி மற்றும் அவரது நண்பரான ராஜ்கண்ணன் ஆகிய இருவரும் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து சிலம்பரசன் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காரை ஏமாற்றி எடுத்துச் சென்ற சிவபிரகாஷ், மிரட்டல் விடுத்த பழனிச்சாமி மற்றும் அவரது நண்பர் ராஜ்கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

17 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi