கைக்கு கிடைக்கும் வருவாய், வாய்க்கு கூட பத்தவில்லை வாடகை வாகன ஓட்டுனர்கள் குறித்து ராகுல் காந்தி வேதனை: கொள்கை முடிவு எடுப்பதாக உறுதி

புதுடெல்லி: வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு கைக்கு கிடைக்கும் வருவாய், வாய்க்கு கூட பத்தாத சூழலில் அவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதுகுறித்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியும் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்ளும் லாரி ஓட்டுநர்கள், விவசாயிகள்,உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் உள்ளிட்ட வரை நேரில் சந்தித்து அவர்கள் தனது வாழ்நாளில் சந்திக்கும் துயரங்கள் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்த வீடியோக்களையும் ராகுல் காந்தி அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

இந்த புதிய முயற்சியானது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் உதவியாக இருந்தது.இந்த நிலையில் ராகுல் காந்தி கிழக்கு டெல்லியில் உள்ள கோண்டாலி பகுதியில் ஊபர் நிறுவனத்தின் செயலி மூலம் கார் ஒன்றை புக் செய்து அதில் ஜன்பத் இல்லம் வரை பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது வாடகை கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சந்திக்கும் சூழல், வருமானம், பணமதிப்பிழப்பு உள்ளிட்டவையினால் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை குறித்து உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் சுனில் உபாத்தியாய் என்பவரிடம் ராகுல்காந்தி உரையாடலாக பேசியுள்ளார்.

அதேப்போன்று பயணத்தின் போது கார் ஓட்டுனரின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலமும் பேசிய ராகுல் காந்தி ஜன்பத் இல்லத்தில் இறங்கிய பிறகு, கார் ஓட்டுனரின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு சில பொருட்களை ராகுல் காந்தி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த ஒட்டுனரின் குடும்பத்தினரையும் உணவகத்தில் சந்தித்து அவர்களோடு உணவு அருந்தி அவர்களது வாழ்வாதாரம் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

இது குறித்தான வீடியோவை ராகுல் காந்தி அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். அதில், நாடு முழுவதும் சுனில் உபாத்தியாய் போல பல ஓட்டுநர்கள் கைக்கு கிடைக்கும் வருவாய், வாய்க்கு கூட பத்தாத சூழலில் பிழைத்துக் கொண்டிருப்பதாகவும், சேமிப்பு, எதிர்காலத்திற்கான அடித்தளம், திட்டமிடுதல் என எதுவும் இல்லாத சூழலில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வாடகை கார் ஓட்டும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில், அம்மாநில அரசுகள் உறுதியான கொள்கை முடிவுகளை எடுக்கும் எனவும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு