மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்போது தற்காலிகமாக இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி, மீண்டும் இணைப்பு வழங்க ரூ.2,000 செலவாகும். இந்நிலையில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை மறுவடிவமைப்பு செய்யும்போது அதற்காக தற்காலிக மின் இணைப்பு வழங்க கூடாது என மின்வாரிய பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சேவைகளை நிரந்தரமாக துண்டிக்க களஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது மேல்நிலை கம்பிகள் அல்லது நிலத்தடி புதைவடங்கள் மூலம் வழங்கப்படுகிறதா என்பதைப் பொறுத்து, மும்முனை வீட்டு இணைப்புக்கு ரூ.12,000 முதல் ரூ.24,000 வரை செலவாகும். மேலும் தனி வீடுகளில் கூடுதல் தளம் கட்டும் பணிகள் அல்லது மறுவடிவமைப்பு பணிகளுக்கு ஒராண்டுக்கு மேல் தற்காலிக இணைப்பு வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இடிக்கப்படும் கட்டிடத்தில் உள்ள ஒரு சேவை இணைப்பு மட்டுமே கட்டுமான நோக்கங்களுக்காக தற்காலிக இணைப்பாக மாற்றப்பட்டு, கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு மீண்டும் நிரந்தர வகைக்கு மாற்றப்படும். கட்டடத்தில் இருக்கும் மற்ற சேவைகள் நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும். மீட்டர் அகற்றப்பட வேண்டும். நுகர்வோருக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு கணக்கு மூடப்படும். புதிய கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் புதிய இணைப்புக்கு நுகர்வோர் அணுகினால், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி வழக்கமான வகைக்கு ஒரு புதிய சேவை இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாதாரண நடைமுறை பின்பற்றப்படும்.

ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் வரும்போது, ​​சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், புதிய கட்டிடத்தில் எத்தனை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரியாது. எனவே, ஒரே நுகர்வோர் ஒரே வீட்டிற்கு இரண்டு சேவை இணைப்புகளைப் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த உத்தரவு கட்டுமான துறையினருக்கு புதிதாக இருக்காது. மறுசீரமைப்புக்கு முன், நுகர்வோர் ஏற்கனவே உள்ள சேவை இணைப்புகளை ஒப்படைக்கும் நடைமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

இடியுடன் கொட்டிய கனமழை

பாலித்தீன் குப்பைகளால் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம்

ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு பயிற்சி பட்டறை