நெல்லை: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என நெல்லையில் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா தெரிவித்தார். தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா நேற்று நெல்லைக்கு வந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நெல்லையில் மழை வெள்ளம் பொதுமக்களை அதிகளவு பாதித்துள்ளது. நெல்லையில் நான் பார்வையிட்ட இடங்களில் பொதுமக்கள் எங்களிடம் நிவாரணம் தேவை என்றதோடு, நிராயுதபாணியாக நிற்பதாக தெரிவித்தனர்.
போர்க்கால அடிப்படையில் அரசு இங்கு நிவாரண பணிகளை செய்ய வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன். சென்னையில் வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவது போல், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். தொழில்களை இழந்து வாடும் வியாபாரிகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.