சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டதில் சில அம்சங்கள்:
* உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும். வழக்காடு மொழி தமிழில் இடம் பெற வேண்டும்.
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் நாட்களை 100 நாளில் இருந்து 150 நாட்களாக உயர்த்த வேண்டும். பணி செய்யும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ.450ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
* மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றார். இது, திமுக திட்டத்தை காப்பி அடிப்பதாக உள்ளதே என்று நிருபர்கள் கேட்டபோது, “இது மத்திய அரசுக்கான தேர்தல். அதனால் மத்திய அரசு மகளிருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். திமுகவை நாங்கள் பின்தொடரவில்லை” என்றார்.
* தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
* மேகதாது திட்ட அணை, முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
* காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தை மத்திய அரசு நிதி வழங்க விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
ஆளுநர் நியமனத்துக்கு எதிர்ப்பு
* மத்திய அரசு, ஆளுநரை மாநிலங்களுக்கு நியமனம் செய்யும்போது சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து, முதல்வரின் ஒப்புதலோடுதான் நியமனம் செய்யப்பட வேண்டும்.
* மத்திய-மாநில அரசுகளின் உறவு வலுப்படவும், கூட்டாட்சி முறைக்கு வித்திட்டதாக அமையும் நோக்கிலும், ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த அதிமுக மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.
* ரயில் பயணங்களில் மூத்த குடிமக்கள், பத்திரிகையாளர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும்.
* பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் மானியமாக ரூ.5 லட்சம் உயர்த்தி வழங்க வலியுறுத்துவோம்.