சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக வணிகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை தேர்தல் ஆணையரிடம் நேரில் விளக்கி கூறினோம். மேலும் வாக்களிப்பு முடிந்தபிறகும், ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தோம்.
இதை ஏற்று, நேற்று முதல் பறக்கும் படைகள் திரும்ப பெறப்படுவதாக அறிவித்து, மாநில எல்லைகளில் மட்டுமே பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதனால், வணிகர்கள் இயல்பாக வணிகத்தை மேற்கொள்ளவும், அரசுக்கான வரி வருவாயை உறுதி செய்திடவும் வழிவகுக்கும் என்பதனை மனதார வரவேற்று நன்றியை காணிக்கையாக்குகிறோம்.