சென்னை: தமிழகத்தில் கோடை காலத்தையொட்டி பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் மற்றும் மின்சாரம் விநியோகிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் நிலவும் கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையிலும், குடிநீர் மற்றும் மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கவும் அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கோடை காலம் தொடங்கியது முதல் அனைத்து துறைகளின் செயலர்கள் மற்றும் உயரதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக அந்தந்த மாவட்டத்தில் நிலவும் சூழல் குறித்து தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் செந்தில்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளின் செயலர் ராஜாராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தடையில்லா மின்சாரம், தட்டுப்பாடில்லா குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.2 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் முன்னெடுக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்தான அறிக்கை முதல்வரிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.