கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பதிவுத்துறையில் ரூ.1,121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பதிவுத்துறையில் ரூ.1,121 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024 செப்டம்பர் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், பதிவு செய்த ஆவணங்களை அதே நாளில் திருப்பி ஒப்படைத்தல், இணையவழி பட்டா மாற்றம் செய்வதை தெரிவு செய்தல், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிடப்பட்ட நகல்கள் இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் உள்நுழைவிற்கே இணையதளம் வழி அனுப்பி வைத்தல், நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்கள், தணிக்கை பிரிவு அலுவலர்களின் பணிகள், முக்கிய பதிவேடுகளை பராமரித்து கண்காணித்தல், வருவாய் மற்றும் நிர்வாக சம்பந்தப்பட்ட கருத்துக்கள் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும் பதிவு செய்த ஆவணங்களை அன்றே திருப்பி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார், தொடர்ந்து உயர் அலுவலர்களால் விவாதிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துகளை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களிடம் எடுத்து கூறி அவற்றினை செயல்பாட்டிற்க்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார். பதிவுத்துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் செப்டம்பர் மாதம் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை ரூ.1,121 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் விற்பனை – மேலும் 5 பேர் கைது

சிகிச்சை ஓவர், மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் உற்சாகம்..!

அக்.04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை