காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: பல் டாக்டர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர்: காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த பல் டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் நாராயணநாயக்கன்புதூரை சேர்ந்த 23 வயது பெண் திருப்பூர் டி.கே.டி. மில் அருகே உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். திருப்பூர் வள்ளலார் நகரை சேர்ந்த முருகன் என்பவரது மகன் இமையன் (27). பல் டாக்டரான இவர் பழவஞ்சிபாளையம் பிரிவில் பல் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் பல் மருத்துவ சிகிச்சைக்காக இளம்பெண் இமையன் நடத்தி வரும் பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இமையனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் தெரிவித்துள்ளார். ஆனால் இமையன் திருமணம் செய்வதில் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண் கடந்த வாரம் எறும்பு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய இளம்பெண், பல் டாக்டரான இமையன் தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாகவும், எனவே இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் இமையன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது