ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்

ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் அருகே சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றப்பட்டன. இதற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே தருமத்துப்பட்டியில் 50க்கும் மேற்பட்டோர் தென்னை விவசாயம் செய்து வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இவர்களது விவசாய நிலங்கள் கோயிலுக்கு சொந்தமான நிலம் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் மதுரை – பழநி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக வீடுகளையும், விளைநிலங்களையும் அகற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறியதால் இப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சாலை பணிக்காக 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் நேற்று போராட்டம் அறிவித்திருந்தனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், போலீசார் உதவியுடன் போராட்டம் நடத்திய அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றி விட்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கினர். மேலும் 2 வீடுகள் அகற்றப்பட்டன.

பின்னர் போராட்டம் நடத்தியவர்களிடம் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் கன்னிவாடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்ஐ சிராஜூதீன், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணவேணி, விஏஓ தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் அனைவரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘‘நான்கு வழிச்சாலை பணிக்காக அகற்றப்பட்ட குடியிருப்புகள், தென்னை மரங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்கி வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும் இப்பணியின்போது ஒரு தென்னை மரம் விழுந்து கார் சேதமடைந்தது. அதற்கும் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

40 coconut trees, 2 houses removed for four-lane road near Redyarchatram: Farmers protest demanding compensation

Related posts

ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் சுபத்ரா யோஜனா திட்டம்: முதல் தவணை பணத்தை எடுக்க வங்கி, ஏடிஎம் மையங்களில் திரண்ட பெண்கள்

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்!

அக்டோபர் 1ல் இருந்து 10ம் தேதிக்குள் சென்னை பீச்-திருவண்ணாமலை, அரக்கோணம்-சேலம் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்