ஆவடி அடுத்த பட்டாபிராம் மீன் மார்கெட் பின்புறம் மாங்குளம் பகுதியில் செங்குட்டுவன் என்பவர் ஏரி நீர் நிலைபகுதியில் 50 சென்ட் நிலத்தினை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு அந்த நிலத்தில் 25 சென்ட் இடத்தில் கட்டடமும் கட்டியிருந்தார். அந்த இடத்திற்கு பட்டா பெற செங்குட்டுவன் முயற்சி செய்தபோது, ஆக்கிரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப். 14ம் தேதி வருவாய் துறையினர் கட்டடத்தை அப்புறப்படுத்த செங்குட்டுவனுக்கு நோட்டீஸ் வழங்கி 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன் பிறகும், அவர் இடத்தை காலி செய்து தராததால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அரசு நிலத்தை மீட்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நேற்று காலை 7.30 மணி முதல் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் கற்பகம் மற்றும் ஆவடி தாசில்தார் விஜயகுமார் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த இடத்தை சுற்றியுள்ள கட்டப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் மற்றும் அதையொட்டி கட்டப்பட்டு இருந்த கட்டடமும் இடித்து அகற்றி பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்பின்போது அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பட்டாபிராம் போலீஸ் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் சங்கர் உட்பட 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.