ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு தரக்கோரி 5 இருளர் குடும்பத்தினர், வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆர்.கே.பேட்டை, ஆதிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த 5 இருளர் குடும்பத்தினர், வட்டாட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் கிராமத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனையில் கூரை வீடுகள் அமைத்து 5 இருளர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் வசித்து வந்தோம். தங்களின் வாழ்வாதாரத்திற்காக அனைவரும் பெங்களூரு சென்று, அங்கு குடும்பங்களுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தோம். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சொந்த ஊர் திரும்பினோம். கிராமத்தில் அரசு வழங்கிய இடத்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த தனிநபர், அனுமதியின்றி முருகன் என்பவரிடமிருந்து கிரையம் பெற்று, வேலி அமைத்துள்ளார். எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள எங்களின் இடத்தினை மீட்டு தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர். அப்போது, இப்புகாரின் மீது விசாரனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் பாரதி உறுதியளித்தார்.