திருவண்ணாமலை, நவ.6: திருவண்ணாமலையில் கொடூரமாக விரட்டி வெட்டப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
திருவண்ணாமலை வடவீதி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து என்கிற உதயமுத்து(40). ரியல் எஸ்டேட் உரிமையாளர். சின்னக்கடை தெருவைச் சேர்ந்தவர் ராஜஷ்ே(42). இருவரும் நண்பர்கள். இந்நிலையில், கடந்த 30ம் தேதி இரவு திருவண்ணாமலை- வேலூர் சாலையில் வேங்கிக்கால் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகே பைக்கில் சென்ற இருவரையும் வழிமறித்து, 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டியது.
அதில், உதயமுத்து படுகாயம் அடைந்து, வேலூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மூளைச்சாவடைந்ததாக கூறப்படுகிறது. எனவே, மீண்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்கு உதயமுத்து இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைசெய்யப்பட்டு காலை 10 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை உடல் அடக்கம் செய்யப்பட்டது.