புதுடெல்லி: மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை வரவேற்க தயாராக இருப்பதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வரும் 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த புதிய உறுப்பினர்களும் போட்டியிட்டுள்ளனர். இவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான பல்வேறு வசதிகளை செய்து தர தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவை செயலகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “18வது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் ஏற்கனவே அரசு தங்குமிடங்கள் இல்லாதவர்களுக்கு, வழக்கமான தங்குமிடங்கள் வழங்கப்படும் வரை மேற்கு நீதிமன்ற விடுதி, மாநில விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு இடங்கள் அளிக்கப்படும்.
ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வௌியாகும்போது தலைமை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை மிக கவனத்துடன் கண்காணிக்கவும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் தொடர்பு உள்ளிட்ட விவரங்களை நிகழ்நேர அடிப்படையில் பதிவு செய்யவும் ஒரு குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அந்த குழு, வெற்றி பெற்ற வேட்பாளர் ஏற்கனவே மக்களவைக்கு தேர்வானவரா அல்லது புதிதாக தேர்வு செய்யப்பட்டவரா என்பதை சரி பார்க்கும்.
தற்போது புதிதாக தேர்வாகும் உறுப்பினர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிட இணைப்பில் பதிவு செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.