சென்னை: சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தீரன் சின்னமலையில் நினைவுநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயார். ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்பதால் பாரபட்சம் காட்டக் கூடாது. அதிமுக கொடியை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் பயன்படுத்தியதற்கு எதிராக வழக்கு தொடருவோம். பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்விக்கு, சூழலை பொறுத்து முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார்.