காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மண்டலங்களை சேர்ந்த ரேஷன் கடைகளை, சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்ட எல்லைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு துறையின் கீழ் சென்னை இணைப்பதிவாளர் பொது விநியோக திட்டம் 1, பொது விநியோக திட்டம் 2 ஆகியவற்றின் கீழ் செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் 221 முழு நேரம் மற்றும் 4 பகுதி நேரம் என மொத்தம் உள்ள 225 ரேஷன் கடைகள், திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் 107 ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மண்டலத்தில் செயல்படும் 8 மணி நேர ரேஷன் கடைகள், சென்னை மாநகராட்சி வரையறைக்குள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கண்காணிப்பு பணிகளில் ஏற்படும் சிக்கல்களை களையும் வகையில், இந்த கடைகள் சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதன்படி சென்னை இணைப்பதிவாளர் பொது விநியோக திட்டம் 2ன் கீழ் இயங்கி வரும் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்திவரும் 186 ரேஷன் கடைகள், மேடவாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் 38 ரேஷன் கடைகள், ஐஏஎப் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் 1 ரேஷன் கடை என மொத்தம் 225 ரேஷன் கடைகள் செங்கல்பட்டு மண்டலத்திற்கு மாற்றப்படுகிறது. சென்னை இணை பதிவாளர் பொது விநியோகத் திட்டம் 1ன் கீழ் இயங்கி வரும பூங்கா நகர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் 56 ரேஷன் கடைகள், சைதாப்பேட்டை தாலுகா வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தும் 42 ரேஷன் கடைகள், காஞ்சிபுரம் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நடத்தும் 9 ரேஷன் கடைகள் என மொத்தம் 17 ரேஷன் கடைகள் திருவள்ளூர் மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம் மண்டலத்தில் இயங்கி வரும் கொளப்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கம் நடத்திவரும் 8 ரேஷன் கடைகள், சென்னை இணைப்பதிவாளர் பொது விநியோக திட்டம் 2ன் கீழ் இயங்கி வரும் மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி மொத்தம் 340 ரேஷன் கடைகள் மாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்..!!

நிலச்சரிவால் வயநாடு பகுதி வனத்தில் இருந்த காட்டுயானை ஆற்றில் அடித்து வரப்பட்டு உயிரிழந்தது

ஒரு இடம் கூட தராததால் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம்: துரை வைகோ