பெயர் சேர்த்தல், நீக்கம் திருத்தம் செய்ய ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: 19 இடங்களில் நாளை நடக்கிறது

திருவொற்றியூர்: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை சென்னையில் 19 இடங்களில் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 8ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இந்த முகாம்களில் மேற்கொள்ளப்படும். நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்றும் வழங்கப்படும்.

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு