பார்மர்: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ மேவரம் ஜெயினை கட்சியில் இருந்து நீக்கம் செய்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ மேவரம் ஜெயின் மீது திருமணமான பெண் ஒருவர் ஜோத்பூர் அடுத்த ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அந்த புகாரில், ‘மேவரம் ஜெயின் மற்றும் அவரது கூட்டாளி ராம்ஸ்வரூப் ஆச்சார்யா ஆகியோர் என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
எனது 15 வயது மகளிடம் பாலியல் சீண்டல்களை செய்தனர்’ என்று குறிப்பிட்டு, இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களையும் அளித்தார். அதையடுத்து மேவரம் ஜெயின், ஆனந்த் சிங் ராஜ்புரோஹித் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தையும் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தால் தன்னை கைது செய்யக் கூடாது எனக்கூறி நீதிமன்றத்தில் மேவரம் ஜெயின் முறையிட்டார்.
இதையடுத்து, வரும் 25ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே முன்னாள் எம்எல்ஏ மேவரம் ஜெயினை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் நீக்கி அக்கட்சியின் மாநில தலைவர் உத்தரவு வெளியிட்டுள்ளார். இருந்தும் மேவரம் ஜெயின் தொடர்பான ஆபாச வீடியோவும், அவர் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.