வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டி கடத்தி சென்றதாக பாஸ்கர் என்பவரிடம், வாகனத்தில் அமர்ந்தபடி வன அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. அதில் காரில் அமர்ந்தபடியே, வேலூர் வன பாதுகாப்பு படை அலுவலர் மூர்த்தி, ‘ரேஞ்சருக்கு தான் கொடுப்பீங்களா, நாங்க ஸ்குவாட் எங்களுக்கும் கொடுக்கணும்’ என லஞ்சம் கேட்பார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், வேலூர் வன பாதுகாப்பு படை அலுவலர் மூர்த்தி, சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது. தற்போது, மூர்த்தி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அவர் மீண்டும் பணியில் சேர்ந்தவுடன் விசாரணை நடத்தப்படும்’ என்றனர்.