கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை அரசு நிபந்தனையுடன் விடுதலை செய்தது. கடந்த 8ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் மீன்பிடித்துவிட்டு 9ம் தேதி அதிகாலையில் கரை திரும்பும்போது கச்சத்தீவுக்கும் – நெடுந்தீவுக்கும் இடையில் இலங்கை கடற்படையினர் 15 மீனவர்களையும், ஒரு படகையும் சிறை பிடித்திருந்தனர். எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இன்று இந்த வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதி பாலன், தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் தெரிந்தே இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கின்றனர். அதுமட்டுமின்றி இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இலுவரையை கொண்டு மீன்பிடிக்கிண்றீர்கள். இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் தாங்கள் மனிதாபிமான முறையில் மீனவர்களை விடுதலை செய்கின்றோம்.
ஆனால் இந்த 15 பேரில் ஏதேனும் ஒரு மீனவர் மீண்டும் இதே குற்றச்சாட்டில் ஈடுபட்டால் சுமார் 1 வருடம் முதல் 3 வருடம் வரை கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தமிழக மீனவர்களை விடுதலை செய்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்தித்த நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.