ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கண்காணிப்பாளர், இடைநிலை உதவியாளர், அர்ச்சகர்கள், காவலர்கள் என 89 பேர் பணிபுரிகின்றனர். இவர்களிடம் இருந்து 2016ம் ஆண்டு முதல் பெறப்பட்ட வருங்கால வைப்பு நிதி ரூ.76 லட்சத்து 68 ஆயிரத்து 547 வாங்கியில் செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது. நன்கொடையாக பெறப்பட்ட ரூ.11.96 லட்சமும் கையாடல் செய்யப்பட்டது கண்டிபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அப்போதைய இணை ஆணையாளர் செல்வராஜ், கணக்காளர் ரவீந்திரன், தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சிவன் அருள் குமரன், அவரின் தந்தை கோபால் ஆகிய 4 பேர் மீதும் பணம் கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ராமநாதபுரம் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.