ராமேஸ்வரம்: எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காங்கேசன் கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது.
மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று(பிப்.04) அதிகாலை 2 மணியளவில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் காங்கேசன்துறை எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனர்களை கைது செய்தனர்.
மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக என்று தகவல் வெளியாகியுள்ளது.