உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு தரையில் விழுந்து வணங்கியபடி பக்தர் புனித பயணம்: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார்

திருவண்ணாமலை: உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி முதல் ராமேஸ்வரம் வரை 3800 கி.மீ சாலை வழியாக தரையில் விழுந்து வணங்கியபடி புனித பயணம் மேற்கொண்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபட்டார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜகிரி மகராஜேந்தா (54). உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக தொண்டு செய்து வருகிறார்.

இந்நிலையில், உலக அமைதி வேண்டி, தரையில் விழுந்து வணங்கியபடி கங்கோத்திரியில் இருந்து ராமேஸ்வரம் வரை சுமார் 3,800 கி.மீ தூரம் புனித பயணத்தைகடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் வழியாக தரையில் விழுந்து வணங்கியபடி தமிழகம் வந்துள்ளவர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை வந்தடைந்தார். பின்னர், திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். பின்னர் திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் வழியாக புறப்பட்டுச் சென்றார். தரையில் விழுந்து வணங்குவதற்காக, சிறிய மெத்தை போன்ற ஒரு அட்டையை பயன்படுத்துகிறார்.

அவருடன், உதவிக்காக சைக்கிளில் அவரது அண்ணன் உடன் வருகிறார். இருவருக்கும் தேவையான உணவுகளை சமைத்து சாப்பிட்டு குறிப்பிட்ட இடங்களில் தங்கி தொடர்ந்து பயணம் மேற்கொண்டனர். தினமும் சராசரியாக 7 முதல் 8 கி. மீ தூரம் வரை இந்த புனித பயணத்தை மேற்கொள்வதாக தெரிவித்தனர். மேலும், இதேபோல் தங்களுடைய ஆசிரமத்தில் இருந்து சிலர் புனித பயணம் ஏற்கனவே மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!