மதுரை: ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிக லிங்கத்தை இலவசமாக தரிசிக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அர்ச்சகர் கோபி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிக லிங்கத்தை இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயில்களில் இலவச தரிசனம் கேட்பவர்களின் பின்னணி என்ன என்று நீதிமன்றம் அறிய விரும்புகிறது என்ற கூறிய நீதிபதிகள், காவல்துறை ஆணையர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், கோயில்களை நிர்வகிக்க அறநிலையத்துறை உள்ள நிலையில் இலவச தரிசனம் கேட்பதை எவ்வாறு ஏற்க முடியும்?. இதேபோல் திருப்பதியில் இலவச தரிசனம் கேட்பீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருப்பதியில் 3 நாள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையில் இங்கு இதுபோன்று மனு தாக்கல் செய்வது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.