Monday, July 1, 2024
Home » ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 1,100 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடி பயணம்

ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 1,100 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடி பயணம்

by Lakshmipathi

ராமேஸ்வரம் / மண்டபம் : தடைக்காலம் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று மதியம் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 14ம் தேதி நள்ளிரவுடன் முடிந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து விசைப்படகுகளிலும் வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள், ஐஸ்கட்டிகள் ஏற்றும் பணியில் மீனவர்கள் மும்முரமாக இருந்தனர்.

இவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள் என கூறப்பட்டது. ஆனால், நேற்று மதியமே ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடி அனுமதி டோக்கன் இல்லாமல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மதியம் சென்றால் தான் இரவில் அதிக மீன்கள் பிடிக்கலாம் என்று மீனவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், பிபர்ஜாய் புயல் அபாயத்தால், மன்னார் வளைகுடா அரபி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ., காற்றின் வேகம் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் நாளை வரை (ஜூன் 18) கடலுக்கு செல்ல வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியிருந்தது. இதனை மீறி, வார ஓய்வு நாளையும் பொருட்படுத்தாமல், உரிய அனுமதி சீட்டு பெறாமல் மண்டபம் வடக்கு கடல் மீன்பிடி தளங்களில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று மதியம் 1 மணியளவில் கடலுக்கு சென்றன.

மீன்பாடு குறைவு; மீனவர்கள் சோகம்

மன்னார் வளைகுடா கடலில் வீசிய பலத்த காற்றினால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே தடையை மீறி பாம்பன் மீனவர்கள் 15ம் தேதி மதியம் கடலுக்கு சென்று நேற்று கரை திரும்பினர். பாம்பன் தெற்குவாடி கடற்கரையை வந்தடைந்த விசைப்படகுகளில் குறைவான மீன்களே பிடிபட்டிருந்தது. நீண்ட நாட்கள் கழித்து மீன் பிடிக்க செல்வதால் அதிகளவில் மீன்பாடு இருக்கும் என்ற நம்பிக்கையில் படகில் சென்ற மீனவர்கள், மீன்பாடு குறைந்ததால் மிகவும் ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளதாக தெரிவித்தனர். ரூ.1 லட்சம் வரை தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

three + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi