ராமேஸ்வரம் ராமர் பாதம் அருகே வடகாடு செல்லும் சாலையோரத்தில் உள்ள இடத்தில் பல ஏக்கர் அளவில் பனை மரங்கள் உள்ளன. பனை மரங்களை இடத்தின் உரிமையாளர் தரப்பினர், எவ்வித அரசு அனுமதியுமின்றி வெட்டி சாய்த்து அழித்தனர்.இதில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ராமேஸ்வரம் தாசில்தார் செல்லப்பாவிடம் கேட்டபோது, ‘‘ராமேஸ்வரம் தீவு பகுதிக்குள் பனை மரங்களை வெட்டுவதற்கு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. தற்போது பனை மரங்கள் வெட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளரிடம் உரிய அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்’’ என்றார்.