மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் – மீனாட்சி தம்பதிக்கு கடந்த நவ. 14ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மூச்சுத்திணறல்காரணமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது டியூப் வழியாக திரவ உணவு வழங்கப்பட்டது. பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. பிறந்து 51 நாட்கள் ஆன இக்குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து ஸ்கேன்எடுத்தபோது குழந்தையின் வயிற்றில் டியூப் இருப்பதாக தெரிவித்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் சிகிச்சைக்காக பெற்றோர் குழந்தையை நேற்று அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனை தரப்பில் கூறும்போது, ‘‘குழந்தையின் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் ஸ்கேன் எடுத்தபோது டியூப் போன்ற பொருள் இல்லை. எனினும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.