செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த சிறுமயிலூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம் நடந்து வருகிறது. இதில், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரான அருண்குமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று அதே பகுதியைச் சேர்ந்த சிட்டிபாபு என்பவர் குடிபோதையில் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை இழிவான வார்த்தைகளால் பேசியதோடு, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த போதை ஆசாமி, கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருண்குமார் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சூனாம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிட்டிபாபுவை கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.