Sunday, September 8, 2024
Home » மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தார் சோனியா காந்தி

மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தார் சோனியா காந்தி

by Karthik Yash

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 13 மாநிலங்களை சேர்ந்த 50 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. மீதமுள்ள இரண்டு மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள். அதாவது உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவையகும். இதில் ஒன்பது ஒன்றிய அமைச்சர்களும் அடங்குவர்.

இதில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது வரும் 15ம் தேதி வரையில் உள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 20ம் தேதி வரை தங்கள் பெயர்களை திரும்பப் பெறலாம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கடந்த மாதம் 29ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவைக்கு போட்டியிட உள்ளவர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தரப்பிலும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சோனியா காந்தி ராஜஸ்தானிலும், டாக்டர் அகிலேஷ் பிரசாத் சிங், பீகார் மாநிலத்திலும், அபிஷேக் மனு சிங்வி, இமாச்சலிலும் மற்றும் சந்திரகாந்த் ஹண்டோர் மகாராஷ்டிரா மாநிலத்திலும் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதேபோல் இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி போட்டியிடுகின்றார். பீகாரில் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் மகாராஷ்டிராவில் சந்திரகாந்த் ஹந்டோர் ஆகியோரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கர்நாடகாவில் இருந்து போட்டியிடுகிறார்.

* ராகுல் யாத்திரை ரத்து
பாரத் ஜோடோ நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று சட்டீஸ்கரில் இருந்து கார்வா மாவட்டத்தின் மூலமாக மீண்டும் ஜார்கண்ட்டிற்குள் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டு சென்றார். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சோனால் சாந்தி கூறுகையில், ‘‘ ஜார்கண்ட்டில் நீதி யாத்திரையின் கீழ் நடக்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்ட்டில் யாத்திரை மீண்டும் தொடங்கும் என்பதற்கு சாத்தியமில்லை” என்றார்.

* சோனியா தோல்வியை ஒப்புக்கொள்கிறார்?
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு சோனியாகாந்தி வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் பாஜ தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டிவிட்டர் பதிவில்,‘‘அமேதியில் ராகுலின் மோசமான தோல்விக்கு பின் அடுத்தது ரேபரேலி. சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவு செய்திருப்பது வரவிருக்கும் மக்களவை தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வதாக இருக்கிறது. ரேபரேலியில் போட்டியிடுவதற்கு பதிலாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியானது தங்களது ஒவ்வொரு கோட்டையையும் விட்டு வெளியேறிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி 11 தொகுதிகளை வழங்கியிருந்தாலும் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

4 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi