பூதப்பாண்டி: குமரிமாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த அருமநல்லூர் பஸ் நிறுத்தம் எதிரே, காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ராஜீவ்காந்தி சிலையின் தலைப்பகுதி சேதமடைந்து இருந்தது. போலீசார் விசாரணையில், நேற்று முன்தினம் தீபாவளியை முன்னிட்டு அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி அமைத்து, வாணவேடிக்கையுடன் கொண்டாட்டம் நடந்து உள்ளது. இதில் பட்டாசு வெடித்து சிலை சேதமடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சேதமடைந்த சிலையை மூடி வைத்து உள்ளனர். இதற்கிடையே நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் விழா நடத்தியவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அருமநல்லூர் காந்திநகரை சேர்ந்த சஜின்(25) என்ற வாலிபரை கைது செய்தனர். அவர், பட்டாசு வெடித்தபோது எதிர்பாராமல் சிலை சேதமடைந்ததாகவும் வேண்டுமென்றே உடைக்கவில்லை என்றும் கூறியதாக தெரிகிறது.