கூட்டுறவு சங்கம் குத்தகை பணத்தை முறையாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை மூலம் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை உடனடியாக மீட்குமாறு அறநிலைத்துறைக்கு வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் வளர்மதி தலைமையில் ஆலய நிலங்கள் குத்தகை வட்டாட்சியர் மாரிமுத்து, கோயில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார் உள்பட 50க்கும் மேற்பட்ட அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று தேவதானம் கிராமத்திற்கு வந்தனர். அங்கிருந்த 103 ஏக்கர் குத்தகை நிலத்தை மீட்டனர்.
இதன் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலங்களில் பாதி தரிசாகவும், மீதி நெல் நாற்று பாவியும், நெல் நடவு செய்து 40 நாட்கள் ஆகியும் இருந்தது. இந்த பகுதியில் யாரும் நுழையக்கூடாது என அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை ஊன்றப்பட்டது.
விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட ஆலய நிலங்கள் குத்தகை வட்டாட்சியராக மாரிமுத்து பொறுப்பேற்றதில் இருந்து வத்திராயிருப்பு, தேவதானம் பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.